Monday, February 20, 2017

Tiruvarur temple part2

சிவாயநம.திருச்சிற்றம்பலம்.
கோவை.கு.கருப்பசாமி
பதியும் பணியும் பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
                 ( 2 )
🌺 திருவாரூர் தியாகராஜசுவாமி திருக்கோயில் தொடர். 🌺
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
கி.பி.ஆறாம் நூற்றாண்டிலேயே சிறந்த கோயில்களாகத் திகழ்ந்த பூங்கோயில் எனும் ஆரூர் மூலட்டானமும், அரநெறியும் செங்கற்தளிகளாகத்தான் திகழ்ந்திருக்க வேண்டும். 

பின்னர் கி.பி. ஒன்பதாம்---பத்தாம் -- நூற்றாண்டுகளில்தான் கருங்கற் தளிகளாக இத் திருக்கோயில்கள் மாற்றம் பெற்றன. 

பூங்கோயில் எனும் புற்றிடங் கொண்ட ஈசரது திருக்கோயில் முதலாம் ஆதித்த சோழனால் மாற்றம் பெற்ற கற்றளியாகும்.

பீடம், உபபீடம், கோஷ்டம் மற்றும் பொதிகை விமான அமைப்பு ஆகியவை அனைத்தும் முதலாம் ஆதித்த சோழனின் கலைப்பாங்கில் திகழ்கின்றன.

கருவறை, அர்த்தமண்டபத்துடன் மட்டும் திகழ்ந்த ஆதித்தனின் பணிக்குப் பின்னால் வந்த சோழப் பெருமன்னர்கள் முகமண்டபமும், மகாமண்டபங்களும் எடுத்து விரிவு செய்தனர்.

அரநெறியாம் திருக்கோயில் செங்கற்தளியாக இருந்ததை சோழப் பேரரசி செம்பியன்மாதேவியார் கற்றளியாக மாற்றியமைத்ததை முதலாம் இராசராசனின் கல்வெட்டு கூறுகின்றது. 

இப்பேரரசியார் கருவறை அர்த்த மண்டபப்பகுதியை எடுத்த போதும், மகாமண்டபம் பின்னாளில்தான் எடுக்கப்பட்ட தென்பதைக் கல்வெட்டெழுத்துக்களின் உறுதி தெரிகிறது.

இத்திருக்கோயிலின் கருவறையின் கட்டிடப்பாங்கு செம்பியன் மாதேவியார் பாணி என கலை இயல் வல்லுநர்கள் கூறும் பாங்கில் (ஆதித்தன் கால கலை அம்சம் சற்று விரிவடைந்த நிலை) அமைந்துள்ளது. இவ்விரண்டு கருவறைப் பகுதிகளே இன்றுள்ள திருக்கோயிலின் தொன்மையான கட்டிடப் பகுதிகளாகும்.

"மறை நான்கும் கோபுரமாய் வான் கிழிக்கும் வாசலிது"-- என முத்துக்கவிராயர் தியேகேசர் குறவஞ்சியிலும், மனுநீதிச் சோழராஜன் நாடகத்திலும் குறிப்பிடுவதைப் போலவே, வான்கிழிக்கும் வண்ணக் கோபுரங்களாக வெளிமதிலில் நான்கு பெரிய கோபுரங்களும், ஒரு சிறிய கோபுரமும் (கீழ் திசையில்) அணி செய்கின்றன. இரண்டாம் மதிலை இரண்டு திருக்கோபுரங்களும் மூன்றாம் மதிலை அணுக்கன் திருக்கோபுரமும் அலங்கரிக்கின்றன.

இவை ஒவ்வொன்றும் வரலாற்றில் பல்வேறு காலங்களின் கட்டிடக்கலைப் பாணியின் எடுத்துக் காட்டுக்களாகத் திகழ்வதோடு, தனித்த வரலாற்று முத்திரைகளையும்  சுமந்து நிற்பது சுவையான ஒன்றாகும்.

மகாதுவாரம் என வாஸ்த்து நூல்கள் குறிப்பிடும் கிழக்கு இராஜகோபுரம் ஆரூர் திருக்கோயிலின் முக்கிய திருவாயிலாகும். மகா துவாரமான கிழக்கு வாயிலின் மேல்தளம் (முதல் தளம்) வரை முற்றிலும் கருங்கற் கட்டுமானமாகவும், இதற்கு மேல் ஆறு பிரஸ்தளங்களும் ஏழு துவாரங்களும் அமைந்துள்ளன. இவையனைத்தும் சிகரம் உட்பட செங்கற் திருப்பணியாகும்.

உப பீடத்திலிருந்து முதல் தளம் வரை உள்ள கருங்கற்கட்டுமானம் பன்னிரண்டு--பதின்மூன்றாம் நூற்றாண்டின் சோழர்கால சிற்ப-- கட்டிடக்கலையின் உயரிய எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.

கட்டிடக் கலைப்பாங்கு, கோஷ்டங்கள், பஞ்சரங்களின் அமைப்பு கோஷ்டத்தில் தெய்வத் திருவுருவங்கள் நிர்மாணம் போன்ற கலை அம்சங்களில் இத்திருக்கோபுரம் திருபுவனம், தில்லை, திருஆனைக்காக போன்ற திருக்கோபுரங்களை ஒத்துத் திகழ்கின்றது.

சிவபெருமானின் பல்வேறு கோலங்கள், எண் திசைக்குரிய தெய்வங்கள், வாயிற்காப்போர், ஆதித்தன், திருமால் போன்ற தெய்வத் திருவுருவங்களும் நாட்டியச் சிற்பங்களும், யாளி வரிசையின் எழிற்கோலமும் இத்திருக்கோபுரத்திற்குரிய சிறப்பு அம்சங்களாகும்.

கலைநயத்தால் இமயமெனத் திகழும் இந்த இராஜகோபுரம், சிறந்ததொரு வரலாற்றுப் பின்னணியையும் கொண்டு திகழ்வது குறிப்பிடத்தக்கதாகும்.

கி.பி. ஆயிரத்து இருநூற்று இரண்டுக்கு முன்பு சோழ மாமன்னன் மூன்றாம் குலோத்துங்கனுக்கும், பாண்டிய மன்னன் சடையவர்மன் குலசேகரனுக்கும் பெரும் போர் நிகழ்ந்து பாண்டியன் புறமுதுகெய்தினன். 

சோழன் " திரிபுவன வீரதேவன்" எனப்பட்டம் புனைந்து மதுரையில் வீராபிஷேகம், விஜயாபிஷேகம் செய்து கொண்டான் இதன் விளைவால் கிடைத்த பாண்டியநாட்டு கருவூலத்திலிருந்து கிடைத்த பசும்பொன் கொண்டு திரிபுவன வீரேச்சரம் எடுத்ததோடு திருவாரூர் வன்மீகனின் திருக்கோபுரமும் எடுத்தான். இதனைச் சிறைகொண்ட புனல் வையைச் சேரபாண்டியன் மண்டலத்து இறைகொண்ட பசும்பொன்னும் இறையிலியும் கொண்டு பைம்பொன் மதில் திருவாரூர் வானவர்க்கு அளித்தாக குலோத்துங்கனின் மெய்கீர்த்தி கூறுவதோடு, திருபுவனம் கிரந்தக் கல்வெட்டுப் பாடல்.....

வல் மீகீஸ்வர வேஸ்வதி நிகிலம்
நிர்மாய ஹைமதே நிரு போ
வல்மீகாதி பதேஸ் வகார சபா
திவ்யாம் மஹத் கோபுரம்" என்று கூறி மதுரையம்பதியில் மன்னவன் கொண்ட வெற்றியின் சின்னமாக ஆரூர் திருக்கோபுரம் எடுக்கப்பட்டதை விவரிக்கின்றது.


           திருச்சிற்றம்பலம்.

No comments:

Post a Comment