Thursday, March 16, 2017

Pancapakesan maama - Periyavaa

பெரியவா சரணம் !!

"" பெரியவா சொல்லி முடித்தாரோ இல்லையோ, மகன் தடாலென்று பெரியவா முன் ஸாஷ்டாங்கமாக விழுந்து கதறி விட்டான்.""

ஸ்ரீமடத்தில், 1952 வரை கைங்கர்யம் பண்ணிக் கொண்டிருந்த ஒரு பெரியவரின் பெயர் பஞ்சாபகேஶன். பெரியவாளுடைய கைங்கர்யம்தான் வாழ்கை! என்று இருந்த பெரிய பக்தர். 

எல்லாருக்கும் கிடைக்கக்கூடியதா இப்பேர்ப்பட்ட பாக்யம் !

ஆனால், தள்ளாமையினால், மடத்திலிருந்து ஓய்வு பெற்றுக் கொண்டு, பெரியவாளை பிரிய மனஸில்லாமல் தஞ்சாவூரில் உள்ள பிள்ளையிடம் வந்தார். 

உடல்தான் தஞ்சாவூரில் இருந்ததே ஒழிய, மனஸ் பூரா பெரியவாதான்! எனவே தஞ்சாவூரிலும் ஏதோ பெரியவா கைங்கர்யம் என்று பண்ணிக் கொண்டிருந்தார்.

பிள்ளையாண்டான் கேட்டான்......

" ஏம்பா! ஒங்களுக்கு எப்போ பாத்தாலும் பெரியவா கார்யந்தானா? அதான்... அங்க... அவர் கூடவே இருந்து நெறைய பண்ணிட்டேளே! நீங்க படிச்ச படிப்புக்கு, அப்போவே ஏதாவது ஸர்க்கார் உத்யோகம் பார்த்துண்டிருந்தா....இப்போ... பென்ஷனாவது வந்துண்டிருக்கும்.! ஒங்க செலவுக்கு அது useful-லா இருக்கும் இல்லியா?"

"ஶிவ ஶிவா!!"

பஞ்சாபகேஶன் பதறிப் போனார்!! 

அவருடைய உடல் ஒருமுறை நடுங்கியது. பேசக் கூட முடியவில்லை.

"என்ன பேசறடா நீ? பெரியவாளுக்கு கைங்கர்யம் பண்ண குடுத்து வெச்சிருக்கணும்...டா! எனக்கு அந்த பாக்யம் கெடச்சது. அவர் பக்கத்துலேயே இருந்து கைங்கர்யம் பண்ணினேன். நா.. ஒண்ணு கேக்கறேன்..... அதுனால, நீங்கள்ளாம் என்ன கெட்டுப் போய்ட்டேள்? எல்லாரும்.. life-ல நன்னாத்தானே இருக்கேள்? நமக்கெல்லாம் என்ன கொறை? சொல்லு...! இப்டி ஒரு கொறையும் இல்லாமப் பாத்துக்கறதே... என்னோட பெரியவாதாண்டா...!!"

"இல்லப்பா.....ஸர்க்கார் உத்யோகம்னா, பென்ஷன் வந்திருக்குமேன்னு ஒரு ஆதங்கத்ல சொன்னேன்."

ஒரே ஆவேஸமாகப் பேசிய அப்பாவை ஸமாதானப்படுத்தும் விதமாக, பையன் பேச்சை முடித்தான்.

கொஞ்சநாள் கழித்து, ஏதோ கார்யமாக காஞ்சிபுரம் போனான் பஞ்சாபகேஶனின் மகன். 

தர்ஶன வரிஸையில் இவன் முறை வந்தது. நமஸ்காரம் பண்ணிவிட்டு எழுந்தான்....

"நீ.... பஞ்சாபகேஶனோட... பிள்ளதானே?"

"ஆமா........பெரியவா"

"ஒங்கப்பா எப்டி இருக்கார்? நன்னா இருக்காரா? எங்கிட்ட அவருக்கு எவ்ளோ ஆத்மார்த்தமான ப்ரியம், பக்தி தெரியுமோ? அவர... நன்னா.... வெச்சுக்கோ! என்ன செய்வியா?"

"செய்யறேன்......பெரியவா"

"எதுக்கு சொல்றேன்னா..... இந்த மடத்ல கைங்கர்யம் பண்ணறவா.... அத்தனபேருக்குமே... நெறைய பண்ணணும்-னு எனக்கும் ஆசைதான்..! ஆனா, என்னால.. ஜாஸ்தி பண்ண முடியறதில்ல.! குடுக்கறவா என்ன குடுக்கறாளோ, அத.. வெச்சுண்டு இந்த மடத்த நடத்த வேண்டியிருக்கு. இது "ஸர்க்கார்" ஆபீஸ் இல்லேல்லியோ? அதுனால, எல்லாரும் நன்...னா இருக்கணுன்னு.... அனவரதமும் காமாக்ஷியை ப்ரார்த்திச்சுக்கறதைத் தவிர... என்னால வேற என்ன செய்ய முடியும்..ப்பா?.....

....ஆனா..ஒங்கப்பா, இந்த மடத்துக்கு பண்ணின கைங்கர்யத்துக்கும், பக்திக்கும் அவருக்கு எதாவுது பண்ணணுன்னு எனக்கு ஆசை.. அதுனால மாஸா மாஸம் 25 கலம் நெல்லை, அவருக்காக, அவர் இருக்கற க்ராமத்துக்கே வரதுக்கு ஏற்பாடு பண்ணியிருக்கேன்..... 'பென்ஷ.....னா!!"

பெரியவா சொல்லி முடித்தாரோ இல்லையோ, மகன் தடாலென்று பெரியவா முன் ஸாஷ்டாங்கமாக விழுந்து கதறி விட்டான்.

"ஸர்வேஶ்வரா ! எங்கப்பாகிட்ட ஒரு ஆதங்கத்துலதான் பேசினேனே ஒழிய, அவரோட கைங்கர்யத்தைப் பத்தி நா.. கொறையே சொல்லல. பெரியவா.... என்னை மன்னிச்சுடுங்கோ! நெல்லு கில்லெல்லாம் வேண்டாம் பெரியவா! அப்பா மனஸு கலங்கிப் போய்டுவா.... பெரியவா!"

"ஒன்ன... நா.. கொறையே சொல்லல...ப்பா ! என்னால பெருஸ்ஸா எந்த ஒதவியும் பண்ணமுடியல-ன்னுதான், இந்த சின்ன... ஒத்தாஸைக்கு வழி பண்ணினேன்"

பெரியவாளுடைய இந்த வார்த்தைகள்... மனஸை பிழிந்தெடுத்துவிடும்.

அப்பா பண்ணிய ஸேவையை, "பென்ஷன்கூட இல்லை, இன்னும் என்ன ஸேவை?" என்று கேட்ட மகன், அந்த க்ஷணம் முதல் பெரியவாளுக்கே அடிமையாகி, அவர் கைங்கர்யமே மூச்சாக வாழ ஆரம்பித்தான்!

பெரியவா அருகில் இருந்து பண்ணும் ஸேவையும் பாக்யம்தான்! எல்லாரும் அவர் அருகிலேயே இருக்க முடியுமா?....

இருக்கலாமே!

எப்போதும் நம் உள்ளே, நாமாகவே... இருக்கும் அந்தர்யாமியான மஹா பெரியவாளுக்கு, ஸத்யம், ஸகல ஜீவதயை, பக்தி, அவர் சொல்வதை வாழ்வில் கடைப்பிடிப்பது... என்ற கைங்கர்யத்தை எப்போதுமே பண்ணுவதும், பரம பாக்யம்தான்.

compiled & penned by gowri sukumar

------------------------------------------------------
பெரியவாள் வாழும் காலத்திலே நாமும் வாழ்கிறோம் என்பதுதான் எத்தனை பெரிய பாக்யம் !

அவரைப் பார்ப்பதற்கும் அவரது அருள் வாக்கைக் கேட்பதற்கும் என்ன தவம் செய்தோமோ?

காமகோடி தரிசனம்

காணக்காணப் புண்ணியம்

No comments:

Post a Comment