புகழ்ந்து வாழும் கலை!
பாக்கியம் ராமசாமி
மனைவி காப்பி போட்டு டைனிங் டேபிள்மீது வைத்துவிட்டுக் குளிக்கப் போய்விட்டாள்.
சதாசுகம் பத்திரிகைச் செய்திகளிலேயே முழுகிவிட்டதால் காப்பியைக் கவனிக்கவில்லை. மனைவி குளித்து முடித்துத் திரும்பிய பின்னும் காப்பி குடிக்கப்படாமலேயே ஏடு படிந்து எட்டுக்கால் பூச்சி மாதிரி மேற்பரப்பு வலைகட்டிக் கிடந்தது.
நம்ம வீடுகளாயிருந்தால் காப்பி தயாரித்த மகராஜி ஸீலிங்குக்கும் தரைக்குமாகக் குதித்து ரகளை நடந்திருக்கும்.
ஆனால் லீலாவதி அப்படிக் செய்தாளா? குளித்துவிட்டு வந்தவள் ''பாத்ரூமிலே நீங்க புதிதாக அடித்துக் கொடுத்திருக்கும் ஸ்கிரீன் ரொம்ப சவுகரியமாக இருக்கு. பிடித்து இழுத்ததும் வளையங்களில் ரொம்ப ஈஸியாக நகர்கிறது. அப்பாடா என்றிருக்கிறது. ரொம்ப தாங்க்ஸ்'' என்றாள்.
சதாசுகம் பேப்பரைக் கீழே வைத்துவிட்டு முகமலர்ச்சியுடன், ''கடலை மாவில் எதைச் சேர்த்து அரைக்கிறாய்? நீயே செய்த ஸ்னானப் பொடின்னு நினைக்கிறேன். பசு மஞ்சள் வாசனை தூக்கறது?'' என்றார்.
அவள் இவரது ஒரு காரியத்தைப் புகழ்ந்தால், இவர் அவளது காரியம் ஒன்றைப் புகழ்ந்தார்.
இரண்டு பேரின் புகழ் உரைகளில் ஆறிய காப்பி பற்றிய பிரச்னை துவக்கப்படாத அரசியல் கட்சி மாதிரி முளைக்கு முன்னேயே அழிந்துவிட்டது.
....ஒரு ஞாயிறு தினம் சதாசுகம் ஒட்டடை அடித்தார். காய்கறி வாங்க மார்க்கெட் போன மனைவி அப்படியே கோவிலுக்கும் போய்விட்டுச் சாவகாசமாக வந்தவள், ''ஒட்டடையெல்லாம் பிரமாதமாக அடித்திருக்கிறீர்கள்... ஹாலே பளிச்சினு புதுசு மாதிரி ஆயிட்டுது'' என்றாள்.
சதாசுகம் அவள் கையிலிருந்து காய்கறி கூடையை வாங்கிப் பார்த்துவிட்டு, ''மகா இளசு... வெண்டைக்காயை எப்படித்தான் பார்த்துப் பார்த்து பொறுக்கினாயோ?'' என்று பாராட்டினார். ''நேற்று ஒரு தயிர்ப் பச்சடி பண்ணினாயே, ப்ராமிஸா சொல்றேன். அதுமாதிரி ஜென்மத்திலே நான் சாப்பிட்டதில்லே... புடலங்காயைப் பொடிப் பொடியாக நறுக்கி, வதக்கி உறை குத்தின முற்றாத தயிரிலே அப்படியே முழுகடித்து, லேசாக தாளிச்சுக் கொட்டி... பிரமாதம்! உன் கையிலே அதிசய மணம் இருக்கு லீலு! இன்னிக்கு வெண்டைக்காயிலே என்ன ஜாலம் பண்ணப் போகிறே? நீ செய்தால் ஒரு வெண்டக்கா இன்னொன்று மேலே ஒட்டாம தனித்தனியே பேசறது. கவிதை பாடறது.''
அவள் அவரது பாராட்டை ஏற்றுக் கொண்டு, ''நீங்க என்ன வேலை தலைக்கு மேலே இருந்தாலும் காய்கறிகளையெல்லாம் அழகா நறுக்கித் தர்றீங்க. மிஷின் கட்டிங் மாதிரி! ஒரே சீராக வெண்டைக்காய் எப்படித்தான் நறுக்கறீங்களோ? எனக்கு ரொம்ப ஒத்தாசையா இருக்கு?'' என்றாள்.
.....அன்றைக்கு ஒரு விருந்தாளி அவர்கள் வீட்டுக்கு வந்திருந்தார். டயபெடிக். சர்க்கரை இல்லாத காப்பியாக லீலாவதி கொண்டு வந்தாள். ''நான் டயபெடிக். சர்க்கரை போட்டுக்க மாட்டேன்னு எப்படித் தெரியும்?'' என்றார் வந்தவர் ஆச்சரியத்துடன். ''தோ! எல்லாம் அவர்தான். கிருஷ்ண பரமாத்மா மாதிரி கள்ளச் சிரிப்பு சிரிச்சிட்டிருக்கிறாரே உங்க பக்கத்திலே அவர்தான்'' என்று கணவனைக் காட்டினாள் லீலா. ''ஒரு விரலை இப்படி ஆட்டினார் - நீங்கள் கவனிக்கவில்லை. அதுதான் சாடை. மாமாவுக்கு சர்க்கரை போடாதேன்னு அர்த்தம். இப்படித்தான் வாயையே திறக்காமல் அதிசயம் பண்ணிடுவார்..'' என்று வந்திருந்தவரிடம் கணவனைப் புகழ்ந்தாள்.
சதாசுகம் - லீலாவதி தம்பதியர் மகிழ்ச்சியாகவும் ஒற்றுமையாகவும் இருப்பதன் இல்லற ரகசியம் இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். ஒருத்தரையொருத்தர் புகழ்ந்துக் கொள்வதுதான்.
.....ஆகவே வாழும் கலை பயிற்சி எடுத்துக் கொள்ள நமக்கு நேரமில்லையே என்று யாரும் கவலைப்பட வேண்டாம்.
புகழும் கலை தெரிந்தால் போதும். மனைவியை மட்டுமல்ல, நீங்கள் சந்திக்கும் உறவினரையும் புகழலாம்.
ஒரு உறவினர் வீட்டுக்குச் செல்கிறீர்கள். அவரை உங்களுக்குப் பிடிக்காது. அவர் ஒரு சிடுமூஞ்சி. உம்முணா... அவரை எப்படிப் புகழ்வது? பிரசினையே இல்லை. அவரை விட்டுத் தள்ளுங்கள். வீட்டை ஒரு கண்ணோட்டம் விடுங்கள். பழைய பேப்பர்கள் ஒழுங்காக மேஜை அடியில் அடுக்கப்பட்டிருக்கிறதா? அது போதுமே.
''படித்த பேப்பர்களை கரெக்டா இந்த மாதிரி எப்படி அடுக்கி வைக்க முடிகிறது?'' என்று புகழலாம்.
தினசரிக் காலண்டரின் தேதி ஒழுங்காகக் கிழிக்கப்பட்டிருக்கிறதா? அதைப் புகழலாமே. ''சில பேர் கோணாமாணான்னு கிழிப்பாங்க... பழைய தேதிக் கிழிசல்கள் அரையும் குறையுமாக அட்டையில் அடைசலா ஒட்டிக் கொண்டிருக்கும். க்ளீனா ஷேவ் பண்ணிண்ட மாதிரி உங்க வீட்டு காலண்டர் வெகு அழகாக இருக்கு.''
அவர் வீட்டு விளக்குமாறைக்கூட உங்க வீட்டு மாமி புகழலாம்.
''தென்னந்தொடப்பம் எங்கே வாங்கறீங்க? இவ்வளவு நீளமா அடர்த்தியா நான் பார்த்ததே இல்லை. காரே பூரேன்னு இல்லாமல் நல்ல ட்வைன் நூலாப் போட்டுக் கட்டியிருக்கிறதும் பிரமாதம்!''
விளக்குமாற்றையே இப்படி புகழ்ந்தால், அந்த வீட்டம்மாள் போட்டுக் கொண்டிருக்கிற புது டிஸைனிலான ஒரு கிராம் கோல்டு கவரிங் வளையல்களை எப்படிப் புகழலாம் என்று சொல்லியா தரவேண்டும்?
காரியாலயத்தில் பதவியில் உங்களுக்கு மேலேயுள்ள சீனியர்களையும் புகழலாம். கீழேயுள்ள ஜூனியர்களையும் புகழலாம்.
எக்ஸிகியூடிவ் மீட்டிங்கில் சீனியர் வளவளப்பார். ராமாயணத்திலிருந்து கீதையிலிருந்து சில மேற்கோள்களை சம்பந்தமில்லாமல் கூறுவார். ஏனென்றால் அவருக்கு மனப்பாடமானது அந்த சுலோகங்கள் மட்டும்தான்.
''நீங்க குறிப்பிட்ட அந்த கொடேஷன்ஸுகளைத் தொகுத்து ஒரு குட்டிப் புஸ்தகமாகவே போடலாம். என் மைத்துனன் ஒரு சின்னப் பதிப்பகம் நடத்தறான் சார்'' என்று புகழ்ந்தால் அவர் உச்சி குளிரும். உங்களைப் பார்க்கிறபோதெல்லாம், 'நம்ம கொடேஷன்களைப் புஸ்தமாகப் பிரசுரிக்கப் போகிறவர்' என்ற மரியாதையும் பிரியமும் ஏற்படும். 'என்ன பப்ளிஷர் சார்... எப்ப கொண்டு வரப் போறீங்க என் கொடேஷன்ஸை' என்று சகஜமாகக் கேட்பார். நீங்கள் புஸ்தகம் போடவேண்டிய அவசியமே இல்லை. ஆபீசில் உங்கள் மதிப்பு ஜிவ்வென்று உயரும்.
பெரிய ஓட்டலில் சில பேருக்கு மட்டும் வி.ஐ.பி. உபசாரம் செய்வார்கள் வெயிட்டர்கள். அந்த விஐபிக்கள் இத்தனைக்கும் நம்மை விடக் குறைவான டிப்ஸ்தான் தருவார்கள். எப்படி அவர்களுக்கு ஸ்பெஷல் உபசாரம் நடக்கிறது? அவர் எழுந்திருக்கும்போது வெயிட்டர் விரைந்து வந்து நாற்காலியை பின்னுக்கு இழுத்து வழி செய்து தருகிறார். காரணம் விஐபி அந்த வெயிட்டரைப் புகழ்வதுதான். ''சே! உங்க யூனிபார்ம் ஒரு துளி கசங்கல் இல்லை. இவ்வளவு ட்ரிம்மாக இருக்கிறதைப் பார்க்க ரொம்ப சந்தோஷமாக இருக்கு. மிஸ்டர் ட்ரிம்னு உங்களைக் கூப்பிடணும் போலிருக்கு!'' இதுதான் மேற்படி வெயிட்டரை மயக்கிய சங்கதி.
மாமியார் கொள்கொள்ளென்று இருமினாக்கூடச் சில வார்த்தைகள் புகழ்ந்து வைக்கலாம் அவர் காதிலே படற மாதிரி. ''எங்க மாமியார் இருமினாங்கன்னா வெண்கல மணியாட்டம் பிசிறில்லாமல் இருக்கும். இருமல்னா ப்யூர் இருமல். இழுப்பு வீசிங் அதெல்லாமிருக்காது. கோவிலில் சாயங்கால பூஜையிலே அடிக்கிற மணியோட நாதம்தான் எனக்கு ஞாபகம் வரும். அது என்னவோ ஆச்சரியம் பாருங்கள். ஒரு ரெண்டு மாசம் இருமுவார். அடுத்து ஒரு மாசம் இருமமாட்டார். மறுபடி ஒரு ரெண்டு மாசம் இருமுவார். அப்புறம் ஒரு பதினைந்து நாள் இருமமாட்டார். எல்லோராலும் இப்படி இருமிவிட முடியாது.''
மாமியாருக்கு இருமல் நின்று போய்விட்டால்கூடக் கஷ்டப்பட்டு இருமிக் கொண்டிருப்பார் - மருமகளின் சர்ட்ஃபிகேட்டுகளால்.
எண்ணெய் வழியும் முகங்களை 'உங்க முகம் எப்பவும் ஆயில் போட்ட புது மெஷின் மாதிரி பளபளன்னு இருக்கு' என்று புகழலாம். அல்லது, 'சில பேர் மூஞ்சி வறவறன்னு காஞ்ச மொளகாய் மாதிரி இருக்கும். உங்களது ஜீராவில் ஊறின குலோப் ஜாமூன் மாதிரி குளுகுளுனு எண்ணெய் வழிய வழிய இருக்கிற ரகசியம் என்னவோ?'' என்று விசாரிக்கலாம்.
'புகழ்ந்தால் நல்லது' என்று நீங்கள் தீர்மானித்துக் கொண்டுவிட்டால் எதையும் புகழலாம்.
என் நண்பன் நாராயணன் ஒரு சாவு வீட்டில் இறந்த பிரமுகரை இப்படிப் புகழ்ந்தான். சாஸ்திரிகள் வரக் கால தாமதமாகிக் கொண்டிருந்தது. நாராயணனனின் புகழுரை இறந்த பிரமுகருக்கு ''மாமா முகத்திலே இருக்கிற களையையும் தேஜஸையும் பார்த்தால் இன்னும் பத்து நாள் கழித்து சாஸ்திரிகள் வந்தால்கூட வாடாமல் அப்படியே இருக்கும் போலிருக்கு!''
நாராயணன் அப்படிச் சொன்னதை அரிய பொன் மொழி மாதிரி வருகிறவர்களிடமெல்லாம் அந்த வீட்டில் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
No comments:
Post a Comment