Tuesday, September 26, 2017

Vedas to be taught in school - Periyavaa

பெரியவா குரல்

இலவசமாக வேத சாஸ்த்ரம் கற்றுக் கொடுக்கிறோம் என்று ஆரம்பித்தால்கூட அதற்குரெஸ்பான்ஸ் (வரவேற்பு) இல்லை. வேத சாஸ்த்ரம் மட்டுமில்லை திருக்குறள், தேவார-திவ்ய ப்ரபந்தம், அல்லது நம் தேசத்தில் நீண்டகாலமாக இருந்து இப்போது நசித்துவரும் ஸித்தர் சாஸ்த்ரம் முதலானவற்றில்கூட இலவச வகுப்பு நடத்தச் சில பெரியோர்கள் எடுத்த நல்ல முயற்சிகள் பலன் தரவில்லை. இந்தப் படிப்பிலே போனால், உத்யோகத்துக்கு உதவி செய்கிற ஸ்கூல் படிப்புக்கு பாதகமாகிறது என்று ஜனங்கள் இவற்றை ஆதரிக்காமலே விட்டுவிடுகிறார்கள். அதனால் எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் ஸ்கூல் பாடத்தை விடாமல், அதோடேயே வேதாப்யாஸத்துக்கு உரியவர்களுக்கு வேதத்தையும், மற்றவர்களுக்கு இதர புராதன சாஸ்த்ரங்கள், கலைகள் இவற்றையும் சேர்த்துக் கற்றுக் கொடுப்பதற்காக ப்ரைவேட் ஸ்கூல்கள் ஆரம்பிக்கலாம். 

தினமும் அரை மணி, ஒரு மணி ஸ்கூல் டயத்தை நீட்டி, லீவ் நாட்களையும் கொஞ்சம் குறைத்தக் கொண்டால் இந்த மாதிரி ரெகுலர் ஸிலபஸோடு கூடவே சாஸ்த்ரங்கள், தேசியக் கலைகள் இவற்றையும் சொல்லிக் கொடுக்க முடியும். இப்படிப் பசங்களைத் தயார் பண்ணிக் கால விரயமில்லாமலே 'மெட்ரிக்'பரீக்ஷக்கு அனுப்புவதாக ஏற்பாடு செய்தால் அநேகப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இப்படிப்பட்ட ஸ்கூல்களில் சேர்க்க முன் வருவார்கள்.

பென்ஷனர்கள் மாத்திரந்தான் இதைச் செய்ய வேண்டுமென்பதில்லை. எல்லாரும் சேர்ந்து செய்யலாம். மனப்பூர்வமாக ஈடுபட்டு, ''பிற்பாடு டிக்ரி, டிப்ளமோவுக்கு ஹானியில்லாமலே, நம்முடைய புராதன சாஸ்த்ரங்கள், பக்தி நூல்கள், கலைகள் ஆகியவை அழிந்து போகாமல் சொல்லிக் கொடுக்கிறோம்''என்று பொது ஜனங்களுக்கு எடுத்துச் சொன்னால், அவர்கள் நிச்சயம் தங்கள் பிள்ளைகளை இப்பள்ளிக்கூடங்களில் சேர்ப்பார்கள். நம்முடைய தொன்று தொட்ட மஹத்தான நாகரிகத்துக்கு வாரிசாக வருங்காலப் பிரஜைகளை உருவாக்குகிற பேருபகாரம் இது.

No comments:

Post a Comment