Thursday, October 19, 2017

50 rupees = 50 crores - Periyavaa

50 ரூபாய் 50 கோடி ரூபாயாகிய 
அதிசயம்…"

ஆந்திர அரசின் ஆலோசகராக இருந்த Dr S V நரஸிம்மன்  பெரியவாளை  தரிசிக்க வந்தார்.

"கல்கத்தால நல்ல சென்டரான எடத்துல,நல்ல விசாலமா  ஒரு  வீட்டை  வாங்கு.  மண்டபம் வெச்ச  மாதிரி  வீடு.  அதுல  வங்காள புள்ளை கொழந்தேளுக்குன்னு  தனியா  ஒரு ஸாமவேத பாடசாலை  ஒண்ணை  ஆரம்பி! ஏதாவது வீடு இருக்கா?"

"அங்க தென் இந்திய பஜனை ஸமாஜ் இப்போ ஒரு  வாடகைக்  கட்டடத்ல  இருக்கு.  அது நல்ல சென்டரான எடம்.."

"ரொம்ப நல்லதாப் போச்சு! அந்த 
கட்டடத்தை வாங்கிடு!  பஜனை  ஸமாஜ்காரா அவாபாட்டுக்கு அதுல 
இருக்கட்டும்."

"அதை வாங்கணும்ன்னா நெறைய 
ஆகும் பெரியவா…. எங்கிட்ட  அவ்வளவு பணம் இல்லியே! "

"எவ்ளோவ் ஆகும்?"

"கிட்டத்தட்ட அம்பது கோடி வேண்டியிருக்குமே!.." பெரியவா உத்தரவிட்டதை நிறைவேற்றவும்
ஆசையாக இருந்தது.  அதே  சமயம்  பணத்துக்கு என்னசெய்வது? என்ற 
கவலையும் சேர்ந்தது.

"நீ…இப்போ  நேரா  மெட்ராஸ்  போ!  அங்க அண்ணாத்துரை  ஐயங்கார்கிட்டேர்ந்து  அம்பது ரூவா  வாங்கிக்கோ! அது அம்பது கோடி 
பெறும்!…" புன்னகைத்தார்.

ஐம்பது கோடிக்கு ஐம்பது ரூபாயா? 
பெரியவா சொல்லி விட்டார்  என்பதால்  உடனே மெட்ராஸ் வந்தார்.  அண்ணாத்துரை  ஐயங்காரிடம் விஷயத்தை சொல்லி அவரிடமிருந்து முதல் பணமாக  ஐம்பது  ரூபாயைப் பெற்றுக் கொண்டு,  அன்றே  கல்கத்தா போய்ச் சேர்ந்தார்.  பஜனை  ஸமாஜ் இருந்த கட்டடத்தின் சொந்தக்காரர்  ஆஸுடோஷ்  முகர்ஜி,  பெரிய கோடீஸ்வரர்.  அவரை  நேரில்  சந்தித்து இதுபற்றிப் பேசுவதற்காக 
அவருடைய பங்களாவுக்குச்  சென்றார்  நரஸிம்மன்.

இவர் உள்ளே நுழைந்ததும் "வாருங்கள்!வாருங்கள்! உங்களுக்காகத்தான் 
காத்துக் கொண்டிருக்கிறேன்" என்றார்  ஆஸுடோஷ் முகர்ஜி.  இவருக்கோ  ஒரே ஆச்சர்யம்!

"நேற்று இரவு என்னுடைய கனவில் 
அன்னை மஹா காளி  வந்தாள்!  நீங்கள்  குடுக்கும்  பணம் எதுவானாலும்  வாங்கிக் கொண்டு,  அந்தக் கட்டடத்தை  குடுத்து  விடும்படி  எனக்கு உத்தரவிட்டாள்.  அன்னையோட  உத்தரவை நிறைவேற்ற,  உங்களுக்காக  காத்துக் கொண்டிருக்கிறேன்" என்று 
பெங்காலியில் மிகுந்த  நெகிழ்வோடு  கூறினார்.திரு.நரஸிம்மன். 
மானசீகமாக பெரியவாளின்
திருவடிகளை நமஸ்கரித்தார். என்ன 
லீலை இது? "நீ…இப்போ  நேரா  மெட்ராஸ்  போ! அங்க அண்ணாத்துரை ஐயங்கார் கிட்டேர்ந்து அம்பது ரூவா  வாங்கிக்கோ!  அது  அம்பது  கோடி  பெறும்"என்று கூறிவிட்டு, ஆஸுடோஷ் கனவில் மஹாகாளியாக  வந்து  உத்தரவையும் போட்டு, இதோ….. ஐம்பது  ரூபாயில்  ஐம்பது கோடி அந்தர்த்தானமானது! பகவான்
அலகிலா விளையாட்டுடையான்  என்று  மஹான்கள் கொண்டாடுவார்கள்.  தனியாக "செஸ்"விளையாடுவது போல்,பகவான் நம்மையெல்லாம்  வைத்து  விளையாடிக் கொண்டிருக்கிறான்.  கீதையில ்"உனக்குண்டான  கர்மத்தை  செய்.  பலனை எங்கிட்ட  விட்டுடு" என்று சொன்னதை பெரியவா  ப்ரூவ் பண்ணிக் காட்டினார்.

உடனேயே மளமளவென்று காரியங்கள்நடந்தன. மூன்றே மாசத்தில் பஜனை 
சமாஜ் புதுப்பிக்கப்பட்டு, "வேத பவன்"  என்ற பெயரில் பெரியவா  சொன்ன மாதிரி ஸாம வேத பாடசாலையும்  தொடங்கப்பட்டு, இன்றும் நடந்து  கொண்டிருக்கிறது.

ஜய ஜய சங்கர…ஹர ஹர சங்கர…

No comments:

Post a Comment